இன்றைய மாலை மலர்
சென்னை, ஆக. 19-
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் ம.தி.மு.க. உறுப்பினர் கண்ணப்பன் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இலங்கை முல்லைத்தீவில் 61 மாணவிகள் சிங்கள ராணுவத்தால் குண்டு வீசி கொலை செய்யப் பட்டது குறித்து இந்த அவையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
இந்த இலங்கை அரசின் தென்னிந்திய துணைத் தூதரகம் திரிக்கப்பட்ட செய்திகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் நிறை வேற்றப்பட்டது என்று கூறியிருக்கிறது. அமெரிக்க அதிபர் தனது தூதரை அனுப்பி இலங்கை அதிபரிடம் 2 மணி நேரம் பேச்சு நடத்தி இருக்கிறார். பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆயுதங் கள் கொடுத்து வருகிறது. இந்திய அரசு இதை கூர்ந்து கவனிக்க வேண்டும். இந்திரா காந்தி பாரத பிரதமராக இருந்த போது திரிகோணமலையில் தளம் அமைக்க எடுத்த முயற்சியை கண்டித்தார்.
இப்போது மீண்டும் அமெரிக்கா திரிகோணமலை வட்டாரத்தில் கால் ஊன்ற முயற்சி செய்து வருகிறது. மாணவிகள் கொலை செய்யப் பட்டதை ஐக்கிய நாட்டு செயலாளர் கோபி அனன் கண்டித்துள்ளார்.
ஆனால் நமது நாடு எச்சரிக்கை செய்யாதது வருத்தம் அளிக்கிறது. இந்திய கடற்படை உதவி செய்தது இலங்கைக்கு ரேடார் வழங்கியது. ஆகியவை இலங்கை ராணுவத்தினர் தமிழர்களை அழிப்பதற்கு மேலும் உதவுவதாக அமைந்து விட்டது.
திரிகோணமலை வட்டாரத் தில் தமிழர்கள் அனாதை யாக்கப்பட்டிருக்கிறார்கள். அரிசி, உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உயிர்காக்கும் மருந்துகள் இல்லை.
எனவே தொண்டு நிறுவனங் கள் மூலம் இவற்றை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் மாநில அரசும் இதற்கு உதவ வேண்டும்.
முதல்-அமைச்சர் கருணாநிதி:- இந்த பிரச் சினை மிகவும் முக்கியமான பிரச்சினை என்றாலும் எந்த அளவுகோல் கொண்டு தீர்மானிப்பது, விமர்சிப்பது என்ற நிலை. ஈழ தமிழர் பிரச்சினையை 2 விதமாக பிரிக்கலாம். அது ராஜீவ்காந்திக்கு முன் ராஜீவ்காந்திக்கு பின்.
ராஜீவ்காந்திக்கு பின் என்ற நிலை வராமலிருந்திருந்தால் ஈழத்தமிழர்களின் நிலையே இன்று வேறாகி இருக்கும்.
1989-ல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று நான் முதல்வராக பொறுப் பேற்றேன். மரியாதை நிமித்தமாக அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தியை சந்திக்க நான் டெல்லி சென்றேன். முரசொலி மாறனும் வந்திருந்தார்.
அப்போது ராஜீவ்காந்தி என்னிடம் இலங்கை பிரச்சினையை நீங்கள் முன்னின்று தீர்க்க வேண்டும். இலங்கை வவுனியாவுக்கு நீங்களும், முரசொலி மாறனும், கோபால்சாமியும் சென்று வவுனியாவில் பிரபாகரனை சந்தித்து பேசி ஒரு முடிவு எடுத்துவாருங்கள் என்று கூறினார். இதற்கான விமான வசதி, போக்குவரத்து ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறினார். மீண்டும் ராஜீவ்காந்தியை சந்தித்து விட்டு சென்னை சென்று தெரிவிப்பதாக கூறினேன். அப்போது ராஜீவ்காந்தி பிரபாகரனை பெரிதும் புகழ்ந்தார். எனக்கே ஆச்சரியம்.
சென்னை திரும்பினேன். அதற்குள் கோபால்சாமி எனக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு வவுனியாவுக்கு சென்று விட்டார்.
அதன்பிறகு என்னென்னவோ நடந்து விட்டது. இலங்கை அரசிலும் பல்வேறு பிரச்சினை எனவே எடுத்த முயற்சியில் தடங்கள் ஏற்பட்டுவிடாது என்றாலும் அந்த முயற்சியை தொடரும்படி ராஜீவ்காந்தி என்னிடம் கூறினார். ராஜீவ்காந்தி தமிழ் மண்ணில் ரத்தம் சிந்தவேண்டியநிலை ஏற்பட்டது. இதனால் இந்தியாவில் இருந்து எழுந்த உணர்ச்சி மாய்ந்து போயின. ஜெயலலிதா இந்த சபையில் கோபத்தோடும் வெறுப்போடும் இந்த பிரச்சினையை அணுகினார். இதே மனநிலை எல்லோருக்கும் இருந்தது.
இருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் தமிழர்கள் நமது, இதயம், தொப்புள் கொடி உணர்வு உள்ளவர்கள். அவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாம் தீர்மானம் நிறைவேற்றியது சரியானதுதான். அந்த தீர்மானத்தை இந்த அவையில் ஏகமனதாக நிறைவேற்றியிருக்கிறோம். தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தது தவறு என்றால் அந்த தவறை செய்து கொண்டுதான் இருப்போம். இலங்கை அரசின் கவனத்தை கவர தீர்மானம் கொண்டு வந்திருப்பதாக இலங்கை துணை தூதரகம் குறிப்பிட்டுள்ளது. இந்த தீர்மானம் கொண்டு வருவதால் இறந்தவர்கள் பிழைத்துவிட மாட்டார்கள். என்றாலும் இலங்கை அரசின் கவனத்தை மட்டுமல்ல இந்திய அரசின் கவனத்துக்கு கொண்டுவரவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேல் நடவடிக்கை என்ன எடுப்பது, எப்படி அணுகுவது என்பதை அவர்கள் கவனிப்பார்கள்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.