அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

மருதம் - தலைவி கூற்று NOT PALLAN

மருதம் - தலைவி கூற்று பாடியவர்: ஆதிமந்தியார். இவர் ஒரு பெண்பாற் புலவர். இவர் சோழன் கரிகால் வளவனின் ஒரேமகள் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். சங்க இலக்கியத்தில் இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே காணப்படுகிறது. பாடலின் பின்னணி: ஒரு நாட்டியமாடும் ஆண்மகனைத் தலைவி காதலிக்கிறாள். அவனைச் சிலகாலமாகக் காணவில்லை. அவனைக் காணாமல் வருந்தியதால், தலைவி உடல் மெலிந்தாள். அவள் கையில் உள்ள வளையல்கள் நெகிழ்ந்தன. தலைவியைப் பார்க்க வந்த தோழி, தலைவியின் வருத்தத்திற்குக் காரணம் என்னவென்று தெரியாமல் திகைக்கிறாள். தலைவி, “ என்னைப் பார். என் கையிலுள்ள வளையல்கள் நெகிழ்கின்றனவே என்று திகைக்கிறாயா? என்னுடைய இந்த நிலைக்குக் காரணம் நான் என் தலைவனைப் பிருந்திருப்பதுதான். நான் ஒர் நாட்டியம் ஆடும் பெண் என்று உனக்குத் தெரியுமல்லவா? என்னைப் போலவே என் தலைவனும் நாட்டியம் ஆடுபவன்தான். சிலநட்களாக அவனைக் காணாததால், நான் அவனைப் பல இடங்களில் தேடினேன். ஆனால், அவனைக் காணவில்லை.” என்று கூறித் தன் காதலைத் தோழிக்குத் தெரிவிக்கிறாள். மள்ளர் குழீஇய விழவி னானும் மகளிர் தழீஇய துணங்கை யானும் யாண்டுங் காணேன் மாண்தக் கோனை யானுமோர் ஆடுகள மகளே என்கைக் கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே. அருஞ்சொற்பொருள்: மள்ளர் = வீரர்; குழீஇய = குழுமியுள்ள (கூடியுள்ள) ; விழவு = விழா; தழீஇய = தழுவிய; துணங்கை = ஒருவகைக் கூத்து; யாண்டும் = எங்கும்; மாண் = மாட்சிமை; தக்கோன் = தகுதி உடையவன்; யான் = நான்; ஆடுகள மகள் = ஆடுகின்ற களத்திற்குரிய பெண் (நாட்டியம் ஆடும் பெண்) ; கோடு = சங்கு; ஈர்த்தல் = அறுத்தல்; இலங்குதல் = விளங்குதல்; நெகிழ்தல் = நழுவுதல்; பீடு = பெருமை; குரிசில் =தலைவன்; ஆடுகள மகன் =ஆடுகளத்தில் உள்ள ஆண் ( நாட்டியம் ஆடும் ஆண்மகன்). உரை: மாட்சிமை பொருந்திய தகுதியை உடைய என் தலைவனை வீரர்கள் கூடியுள்ள விழா நடைபெறும் இடங்கள், ஆண்கள் மகளிரைத் தழுவி ஆடுகின்ற துணங்கைக் கூத்து நடைபெறும் இடங்கள் ஆகிய எல்லா இடங்களிலும் தேடினேன். ஆனால் அவனைக் காணவில்லை. நான் ஒரு நாட்டியம் ஆடும் பெண். சங்கை அறுத்துச் செய்யப்பட்டு, ஓளியுடன் என் கையில் விளங்குகின்ற வளையல்களை நெகிழச் செய்த, பெருமை பொருந்திய தலைவனும் நாட்டியம் ஆடுபவன்தான். விளக்கம்: ஆட்டனத்தி என்ற ஒரு நடனமாடும் இளைஞனைச் சோழமன்னன் கரிகால் வளவனின் மகள் ஆதிமந்தி காதலித்ததாகவும், அவன் காவிரியாற்றுக் கரையில் நடனம் ஆடிக்கொண்டிருந்தபொழுது, காவிரியில் தோன்றிய வெள்ளப்பெருக்கு அவனைக் கவர்ந்து சென்றதாகவும், அவனைக் காணாததால், ஆதிமந்தி அவனைப் பல இடங்களிலும் தேடி அலைந்ததாகவும், பின்னர் இருவரும் ஒன்று கூடியதாகவும் சங்க இலக்கியத்திலும் சிலப்பதிகாரத்திலும் பலகுறிப்புகள் காணப்படுகின்றன. ஆதிமந்தி தன் காதலனைக் காணததால் வருத்தப்பட்டுத் தேடி அலைந்ததாக, வெள்ளிவீதியார் என்ற பெண்பாற்புலவர் அகநானூற்றுப் பாடல் 45-இல் குறிப்பிடுகிறார். ஆட்டனத்தியைக் காவிரியாறு கவர்ந்து சென்ற செய்தியை அகநானூற்றில் நான்கு பாடல்களில் (76, 222, 376, 396) பரணர் குறிப்பிடுகிறார். சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டத்தில் (வஞ்சின மாலை, வரிகள் 10- 15) சோழ மன்னன் கரிகால் வளவனின் மகள் ஆதிமந்தியின் காதலனாகிய ஆட்டனத்தியைக் காவிரி கவர்ந்து சென்று கடலில் சேர்த்ததாகவும், கடல் ஆட்டனத்தியை ஆதிமந்திக்குக்கு மீட்டுக்கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டில், சிறந்த கவிஞராக விளங்கிய கவியரசு கண்ணதாசன், ஆதிமந்தியின் வரலாற்றை ”ஆட்டனத்தி – ஆதிமந்தி காவியம்” என்று ஒரு நூலாக இயற்றியிருக்கிறார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆதிமந்தியின் வரலாற்றை “சேர தாண்டவம் “ என்ற பெயரில் ஒரு நாடகமாக இயற்றியுள்ளார். ஆட்டனத்தி – ஆதிமந்தியின் காதலை மையமாக வைத்து ”மன்னாதி மன்னன்” என்ற திரைப்படம் 1960- ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

Labels:

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு