அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

பழனியில் 18-ம் நூற்றாண்டு செப்பு பட்டயம் கண்டுபிடிப்பு


பழனியில், 18-ம் நூற்றாண்டை சேர்ந்த நகல் செப்பு பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழனியில் மடம் அமைத்து பூஜை நடத்துவதற்காக இந்த நகல் பட்டயம் எழுதப்பட்டுள்ளது. பதிவு: ஏப்ரல் 03, 2018 03:30 AM பழனி, திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய வீட்டில் இருந்த பழங்கால பெட்டியில் ஒரு செப்பு பட்டயம் இருந்துள்ளது. அவருடைய வீட்டில் சுத்தப்படுத்தும் பணி நடந்த போது அந்த பட்டயத்தை சிவக்குமார் பார்த்தார். உடனே அதனை பழனியை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளரான நாராயணமூர்த்தியிடம் அவர் காண்பித்தார். இதையடுத்து அந்த பட்டயத்தை நாராயணமூர்த்தி தலைமையிலான தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அது 18-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது தெரியவந்தது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:- பழனியில் கண்டுபிடிக்கப்பட்ட செப்பு பட்டயம் பண்டைய தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டயம் 36.4 சென்டி மீட்டர் உயரமும், 20.2 சென்டி மீட்டர் அகலமும், 870 கிராம் எடையும் கொண்டது ஆகும். இதில் மொத்தம் 139 வரிகள் எழுதப்பட்டுள்ளன. சாலிவாகன சகாப்தம் 1,627-ம் ஆண்டு பார்த்திவ ஆண்டு சித்திரை மாதம் 30-ந்தேதி இந்த செப்பு பட்டயம் எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் செப்பு பட்டயம் 18-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பது தெளிவாகிறது. பட்டயத்தில் உள்ள எழுத்துக்களை ஆய்வு செய்த போது, ரகுநாத சேதுபதியின் ஆட்சி காலத்தில் அவருடைய மகன் ரெணசிங்க தேவர் கட்டளைப்படி மருதம்பிள்ளை என்பவர் தாமிரத்தால் எழுதிய மூல பட்டயத்தின் நகல் தான் இந்த செப்பு பட்டயம் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த நகல் செப்பு பட்டயத்தை சிவகங்கை சீமையின் 2-வது அரசரான முத்துவடுகத்தேவர், அவருடைய மனைவி வேலுநாச்சியார் ஆகியோருக்கு காரியகர்த்தராக இருந்த தாண்டவராய பிள்ளையின் கட்டளைப்படி திருப்பத்தூரை சேர்ந்த பழனிஆசாரி என்பவரின் மகன் முத்தாண்டி என்பவர் எழுதியுள்ளார். மூலப்பட்டயம் எழுதப்பட்டு 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நகல் பட்டயம் எழுதப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சார்பில் இந்த பட்டயம் எழுதப்பட்டுள்ளது. பழனி மலையில் கந்தபுராணம் வாசிக்கும் சோழநாட்டு வடமுட்டத்தை சேர்ந்த ஏகாம்பர உடையாரிடம் இந்த பட்டயம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் பழனி பகுதியில் மடம் அமைத்து, பூஜை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக அரண்மனையில் வசிக்கும் ராஜ வம்சத்தார் ஆண்டு ஒன்றுக்கு 5 பொன்னும், ஒரு துப்பட்டியும், மற்றவர்கள் 6 பணமும் கொடுக்க வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட சிலர் முருகப்பெருமானுக்கான திருமாலை கட்டளைக்காக ஆண்டு ஒன்றுக்கு 1 பொன்னும், 2 பணமும் கொடுக்க வேண்டும் என்று பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Labels:

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு