அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

பி. இரத்தினவேலு தேவர்

திருச்சிராப்பள்ளி நகர வளர்ச்சிக்கு வித்திட்ட பெரியோர்கள் பலரில் நகராட்சித் தலைவராயிருந்த பி. இரத்தினவேல் தேவர் அவர்கள் முதன்மையானவர். 1883 ஆம் ஆண்டு பிராச்சிலையில் பிறந்தவர். இளம் வயதிலேயே தந்தையாரை இழந்தவர். எஸ்.பி.ஜி. பள்ளியிலும் பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார்.

பொது வாழ்க்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட தேவர் 1924 ஆம் ஆண்டு நீதிக்கட்சி வேட்பாளராகத் திருச்சிராப்பள்ளி நகரமன்ற உறுப்பினருக்குப் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். பின்னர் நகரமன்றத் தலைவராகப் போட்டியின்றி தேர்ந் தெடுக் கப்பட்டார். 1924இல் நடைபெற்ற தேர்தலில் சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1924முதல் 1946 வரை 4 முறை நகராட்சித் தலைவர் பொறுப்பேற்று நகர வளர்ச்சிக்கு அரும்பணியாற்றினார். 1946இல் நடைபெற்ற தேர்தலில் சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேவர், பிற்காலத்தில் நீதிக்கட்சியோடு கருத்து வேறுபாடு கொண்டார். திலகரும், காந்தியாரும் விடுத்த அழைப்பை ஏற்று காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தார். காந்தியடிகளின் போதனைகளை மக்களிடம் பரப்பினார். நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். அதனால் பலமுறை சிறைவாசமும் அனுபவித்தார். ராஜாஜி மன்றும் பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் அன்புக்குப் பாத்திரராகவும் இருந்தார்.

இரத்தினவேல் தேவர், நகரமன்றத் தலைவராகப் பணியாற்றியபோது கம்பரசம் பேட்டையில் இருந்து நீரேற்று நிலையத்தை நகரின் குடிநீர்த் தேவைக்கு ஏற்பத்தி தனது சொந்த செலவில் விரிவாக்கம் செய்தார். அன்றைய மாகாண அரசின் நிதி இலாகா, தேவரின் செயலைக் கண்டித்து இவருக்குத் தாக்கீது அனுப்பியது. இதனை எதிர்த்து இலண்டன் பாராளுமன்றத்திற்குத் தேவர் முறையீடு செய்தார் லண்டன் பாராளுமன்றம் இவரது முயற்சியைப் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கியது. பத்திரிக்கைகளின் மூலம் இச்செய்தியினை அறிந்த மகாத்மாகாந்தி அடிகள் தேவரைப் பாராட்டிக் கடிதம் எழுதினார். திருச்சிராப்பள்ளிக்கு வந்த ஜவஹர்லால் நேரு இவரது இல்லம் வந்து உணவருந்திப் பாராட்டினார்.

திருச்சிராப்பள்ளி நகரக் கூட்டுறவு பண்டக சாலையின் தலைவராகவும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராகவும், தேசியக் கல்லூரி நிரவாகக் குழுத் தலைவராகவும், இலங்கை தமிழர் யூனியன் கிரிக்கெட்குழுத் தலைவராகவும் சிறப்பாகச் செயல்பட்டார். இரத்தினவேல் தேவர் சிறந்த கிரிக்கெட் வீரர். திருச்சிராப்பள்ளியில் கிரிக்கெட் குழு அக்காலத்திலேயே இலங்கை சென்று பெரும் புகழ்பெற்றது. நகரின் குடிநீர்ப் பிரச்சினையைப் பெரிதும் தீர்த்தவர் தேவர்.10-6-48 இவர் இயற்கை எய்தினார்.

இவரது பெயரில் தான் தேவர்ஹால் உள்ளது அந்த இடம் தேவருக்குச் சொந்தமாகும்

மாநகராட்சிஅலுவலகம் உள்ள இடமும் இவருக்குச் சொந்தமானது சிந்தாமனி விற்பனைக்கூடமும் இவருக்குச் சொந்தமானது இலங்கை அமைச்சர் தொண்டைமான் இவருக்கு உறவினராவார் பசும்பொன் தேவர் திருமகனாரும் இவரது இல்லத்தில் கொஞ்சநாள் இருந்தார் காந்தியடிகள் தன் கையால் நூற்ற சேலை ஒன்றை இவருக்களித்தார்.

இன்று இவரது உருவச் சிலையை தமிழக முதல்வர் திறந்து வைக்கிறார். அதற்கு நன்றியும் பாராட்டும் தெரிவிப்போம்.


11மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger ஞானவெட்டியான்

அன்பு இரத்தினம்,
திருச்சி என்றதும் நினைவுக்கு வருபவர் திரு.இரத்தினவேலுத் தேவர் என்பது மறுக்கவியலாதது. அவரின் எண்ணற்ற சேவைகளைத் தொகுத்து வைக்காததால் சரித்திரத்தில் இடம் பிடிக்கவில்லை.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ஓகை

திருச்சி தேவர் ஹாலில் நடந்த சில நிகழ்ச்சிகளுக்குச் சென்ற போது என் நண்பர் இவரைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். (அவரை உங்களுக்குத் தெரியும்) இப்போது மிக விரிவாக இந்தப் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். நன்றி.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger rnatesan

தகவலுக்கு நன்றி என்னார்!!தற்போது இருக்கும் சுயநலமிகளை நினைத்தால் வயிறு எரிகிறதே!!

 
மணிக்கு, எழுதியவர்: Anonymous Anonymous

அந்தக் காலத்தில் தேவர் கட்டிய அரங்கில்தான் அத்தனை நிகழ்ச்சிகளும் நடைபெறும்!
திருச்சி ஷாபர்ஷா தெருவில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த காலத்தில் நானும் இரண்டொரு நிகழ்ச்சிகளுக்குப் போய் வந்துள்ளேன்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

ஆமாம் சார் நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

ஞானம்,ஓகை,நடேசன்,சுப்பையா அனைவருக்கும் நன்றிகள்
தேவர் திருச்சியி்ல் அதிகமான தனது சொத்துகளை நாட்டிற்கு கொடுத்துள்ளார் மாநகராட்சி கட்டிடம் முதல் சுடுகாடு வரை அவரது சொத்தாகும் நேரு அவரது வீட்டில் தரையில் அமர்ந்து உணவருந்தினார் கலைஞர் கருணாநிதியும் அவரது வீட்டிற்கு பக்கத்தில் தான் பணியாற்றினார்.

 
மணிக்கு, எழுதியவர்: Anonymous Anonymous

நல்லதொரு தலைவரைப்பற்றிய தகவலுக்கு நன்றி என்னார் அய்யா.மக்களுக்கு சொந்த காசில் செலவு செய்த பெரும்தலைவர்கள் அந்த காலத்தில் வாழ்ந்தார்கள்.ஆனா இப்ப??

 
மணிக்கு, எழுதியவர்: Blogger மா.கலை அரசன்

இரத்தினவேலுத் தேவர் அவர்களை நினைக்கும் போது பெருமையாக உள்ளது. தகவலுக்கு நன்றி.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

கலை நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris)

என்னார்!
இப்படியெல்லாம் தலைவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அறிய மிக மகிழ்வாக இருக்கிறது.இவரைப் பற்றி இப்போதே அறிகிறேன்.
யோகன் பாரிஸ்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நன்றி யோகன்

 

Post a Comment

<< முகப்பு