வேங்கையின் வேந்தன-2-
வேளிர்:
வல்லூறாய்ப் பல்லவரை எண்ணல் வலிவின்மை
கொல்லென்று கூறி எதிர்த்தல் அறிவின்மை.
புல்லுருவி போலே நாம் பல்லவஆல் பொந்தினிலே
மெல்ல வளர்ந்ததையே வீழ்த்தல் மதியுடைமை!
விஜ:
வேளிரே! ஆண்டுமக்கு மேலேற மேலேற
வாளில் மதிப்புக் குறைந்துகொண்டு போகிறதோ?
வீச்சுக்கத் திக்கு விழிஇமைக்கா வீரன்நான்:
சூழச்சிக்கே கோழைநான். சொல்லுவதைக கேளுங்கள்
சோணாட்டில் சூழ்ச்சி நரியிடத்திலே யிருந்தும்
நானோட்ட எண்ணி நலிகின்றேன். என்னிடத்தில்
சொல்லிவிட்டீர் நீர் இச்சொல்! சொன்னஆள் வேறென்றால்
பல்லிவால் போல்துடிக்கும் பாழ்நாக்கும் துண்டாகி!
வேளி:
தங்கம் கதிர்காய்த்துச் சாய்ந்தாடும் நாட்டரசே!
சிங்கத்தைப் பார்த்துச் சிறுநரியாய் ஆகென்று கூறுவேனோ?
விஜ:
பின்னென்ன கூறகின்றீர்?
வேளி:
கொள்கையில் தான்
மாறுவேனோ, கோனாட்டு மண்ணில் பிறந்தேன் நான்?
சீற்றமிகு சிங்கம் சிறுநரியின் சூழ்ச்சிக்குத்
தோற்றிடுதல் தீதென்றே சொல்கின்றேன், பேரரசே
விஜ:
யார்பே ரரசன்? இருப்பதெல்லாம் சோணாட்டின்
ஓர்கூறு! யானோ ஒருசிற் றரசன்.
வளைவாழ் எலியும் வயல் சொந்தம் பேசும்
நிலையேஇப் பட்டம்! நினைவோடு பேசும்.
வேளி:
குகைவாழ்ந்தும் சிங்கம் கொடுங்காட்டின்கோ தான்!
வகைதொகையாய்க் கூறுகின்றேன் மன்னா! பெருங்காஞ்சித்
தெள்ளா றெறிந்தான் சிறந்தபுகழ் தாலாட்டப்
பல்லவர்கள் சேனை பலத்தோடு வாழ்கின்றார்
ஆற்றல் அறியாமல் யாமெதிர்த்தல் ஆழ்ந்தகுளச்
சேற்றில் மதயானை சிக்கினாற்போல் ஆகும்.
உமைவேண்டிக் கேட்கின்றேன் பல்லவரை உற்ற
சுமை தாங்கி ஆக்கி அதில் சோழர் சுமைவைப்பீர்!
விஜ:
என்றால்?...
வேளிர்:
புனல் நாட்டின் தோல்வி இழப்பெல்லாம்
நன்றாகப் பல்லவர்தோள் நாகரிக மாய்ஏற்றும்.
விஜ:
எப்படித்தான் கூடும்?
வேளிர்:
எழில்மயில்கள் பெண்களொடு
தப்படிதான் இட்டுச் சதிர் பழகும் தஞ்சைநகர்க்
கோட்டையை நோக்கிக் குறிவைக்கும் பாண்டியராம்
ஈட்டிமுனை பாயுமொரு வேங்கையாய் இல்லாமல்
பல்லவரைக் கேடயமாய் நன்கு பயன்படுத்தி
வெல்லும்போர் செய்வதையே வேந்தே நான் வேண்டுகின்றேன்
வெற்றிமங்கை அன்றுதான் வீரமணப் பந்தலிலே
உற்ற மங்கை என்றமர்வாள் உம்பக்கம், பேரரசே!
விஜ:
கோனாடு, கோளரிகள் வாழ்குகைதான் என்றிருந்தேன்;
ஆனால் அதுவோ நரிக்குகைதான் என்கின்றீர்!
வாள்மாற்றல் உண்டு வளைந்தொடிந்தால், கொண்டகுறிக்
கோள்மாற்றல் என்றுமில்லை கோனாட்டு வேளிரே!
யார் என்னைக் கைவிடினும் நான் அஞ்சேன். என்றென்றும்
நீர் என்னைப் பின்தொடர்வீர் என்று நினைத்திருந்தேன்.
நானிலத்தில் நம்பஇனி நல்லஒரு ஆளில்லை;
நான்நிலத்தில் ஓர்தனியாள், நல்லதுணை என்போர்வாள்!
வேளிர்:
சீற்றக் குளிர்காற்று தீண்ட முகிலுணர்ச்சி
மாற்றி மழையாய்ப் பொழிந்து விட்டீர் மாமன்னா!
தண்டிப்பேன் என்றுஎன் தலைவாங்கும் நான்மகிழ்வே:
துண்டிப்பேன் அன்பைஎனச்சொல்லிஎனைக் கொல்லாதீர்.
நீர் நினைப்பு; நானோ செயல்என்று நீள்பொன்னிப்
பார்நினைக்க நான்வாழ்ந்தேன் பார்த்திபா! அந்தகைய
என்மீதோ நம்பிக்கை இல்லை என உரைத்தீர்?
கண்ணையே நம்பா இமை உண்டோ காவலனே?
பேரரசே! சோணாட்டைப் பேரரசாய் ஆக்கிடுவோம்...?
விஜ:
நேரரசே இல்லாத பேரரசாய்
வேளிர்:
நின்று
நிலைக்கத்தான் வேண்டுமெனமில்நெஞ்சு பொருந்தி
இழக்கத்தான் வேண்டும் சிலவற்றை யாமும்
விஜ:
இளவரசன் என்மகனை யானிழந்த போதும்
உளமதிர மாட்டேன்உறுதிகுலையேன் நான்
வேளிர்:
நானிதனை எண்ணி நவிலவில்லை , மாமன்னா!
வான்பெற்று வட்டநிலா இழந்தால் ஏதுபயன்?
தங்களிடம் தான்நான் தயவாகக் கேட்கின்றேன்.
விஜ:
தங்கு தடையின்றிச சாற்றும்.......
வேளிர்:
'தருகிறேன்
என்றுரைத்தால் சொல்லுகின்றேன் என்வேந்தே, ' இல்லை' எனில்
நின்று நிலைக்காது நீர் நினைக்கும் பேரரசு!
விஜ:
சொல்லும் தருகிறேன்----
வேளிர்:
தோய்ந்தேன்நான் தேன்கடலில்
வெல்லும் இனிச்சோழப் பேரரசு வேந்தே!
திருவாழத் தேடி வருவீடாம் தங்கள்
கருவூலத் தைக்கேட்கவில்லைநான் காவலனே!
கேட்டால்நீர் தந்திடுவீர் என்பதனால் கேட்கவில்லை!
ஈட்டிமுனை புண்ணால் இசைவரைந்த மார்பா!
கரிகாலன் கைச்சுவையைக் கண்ட அந்த வீரம்
உறைவாளைக் கேட்கின்றேன், உம்பொருட்டே கேட்கின்றேன்
விஜ:
வாளில்லா வேந்தனா? பல்லில்ல வேங்கையா?
வேளிரே வேடிக்கை!
வேளிர்:
முத்தரையர் முள்காத்த தஞ்சை முழுமலரைக்
கொத்தோடு கொத்திவந்த போதினில்நான் உம்தனித்த
வாள்வீச்சைக் கண்டிருந்தேன்; மாற்றார் தமதாயுள்
நாள்வீழ்ச்சி இன்றோடே என்றோடல் நான்காணேன்!
மார்தட்டி வந்து நின்ற மாறவர்மன் மற்றும்வாள்
கூர்தட்டி வீழ்ந்தான் குளிரரிசில் ஆற்றருகே!
அன்றோவாள் வேண்டும் , அதனால்நான் பார்த்திருந்தேன்;
இன்றோவாள் வேண்டாம் "இழந்துவிடும்" என்கின்றேன்.
வாளுக்கு நீரில்லை மற்றிளங்கோ இன்றிருந்து,
மூளைக்கு நீரேதான் வேறில்லை மூண்டெழுப்பும்.
வீச்சுவாள் நீரிழக்க வேண்டாம் எனச்சோழ
ஆட்சிஇழக்க அகமகிழ்கொள் வீரோ?
விஜ:
இழக்கமாட்டேன் என்னாட்டின் ஆட்சி; இழந்தால்
பிழைக்கமாட்டேன்! பின்னர் உயிரோடிருக்கமாட்டேன்
வேளிரே! நீர் என்னை வென்றுவிட்டீர் வாய்ப்பேச்சில்,
வாள் உறையை விட்டு வராமல் இனிக் கண்ணுறங்கும்.
கூர்வாளால் பேரரசைக் கொள்ளமுடியாதென்றீர்
மாறாக் கூர்த்த மதியாலே கூடுமோ?
வேளிர்:
கூடும், குலவேந்தே! கூறுங்கள்;சீறும்பாம்பு
ஆடி அடங்கல் அதட்டலுக்கா? பாட்டுக்கா?
தொடரும் 3
2மறுமொழிகள்:
அம்மாடி,
வணக்கம் தலைவரே,
ரொம்ப பொறுமையா விஷயத்தை சொல்றீங்க!!பாராட்டுக்கள்!!
நன்றி நடேஸ்
Post a Comment
<< முகப்பு