கள்ளர் சரித்திரம் - 27 -
1921-ம் வருடம் எடுத்தகணக்குப்படி கள்ளர்களின் ஜனத்தொகை
ஜில்லா | ஆண் | பெண் |
---|---|---|
தஞ்சாவூர் | 99671 | 108013 |
திருச்சிராப்பள்ளி | 13081 | 14345 |
புதுக்கோட்டை | 24432 | 26679 |
மதுரை | 94205 | 92527 |
இராமநாதபுரம் | 20543 | 24864 |
திருநெல்வேலி | 6115 | 6468 |
இனம் | மொத்தம் | படித்த வர்கள் | ஆங்கிலம் படித்தவர்கள் |
---|---|---|---|
ஆண் | 259428 | 42223 | 988 |
பெண் | 274544 | 1442 | 23 |
மொத்தம் | 533972 | 43665 | 1011 |
இங்கே குறிப்பிட்ட இடங்களிலன்றி, தென் திருவாங்கூர், கொழும்பு, இரங்கூன், சிங்கப்பூர் முதலிய இடங்களில் இவர்கள் மிகுதியாக இருக்கின்றனரெனத் தெரிகிறது. இரங்கூனிலும், சிங்கப்பூரிலும் இவர்கள் முறையே 'இந்திரகுல மகாஜன சங்கம்' 'கள்ளர் மாக சங்கம்' எனச் சங்கங்கள் ஏற்படுத்தியும் நடத்தி வருகின்றனர். மொத்தத்தில் இவர்கள் தொகை பத்து லட்சத்துக்கு மேலகக் கூடும். நிற்க.
இங்கே குறிப்பிட்ட கணிதப்படி இவர்கள் கல்வியில் எவ்வளவு கீழ் நிலையில் இருக்கின்றனரென்று பாருங்கள். மனிதராய்ப் பிறந்திருப்பினும் கல்வியில்லாதவர் விலங்குகளுக்கு ஒப்பாவாரென்றும், கற்றவரே கண்ணுடையர் கல்லாதவர் முகத்திலே புண்ணுடையரென்றும் ஆன்றோர் கூறியிருப் பவற்றிலிருந்து கல்வியின் உயர்வும், கல்லாமையின் இழிவும் நன்கு விளங்குமன்றோ? இம்மை மறுமை வீடு என்னும் மும்மையும் பயப்பதாய், தளர்ந்துழியுதவுவதாய், நல்லிசை பயப்பதாய், எழுமையம் தொடர்ந்து இன்பமளிப்பதாய் உள்ள கல்வியினும் மக்கள் பெற்ற பாலதாகிய பேறு யாதுளது? இத்தகைய கல்வியில் இவர்கள் மிகவும் பின்னடைந்திருக்கிறார்கள் என்றால் இவர்களுக்கு வேறு என்ன பெருமையுண்டென்று சொல்லக்கூடும்? இவ்வாற்றால் இவர்கள் முதலிற் செய்யற்பாலது தம்மில் கல்வியை வளர்ப்பதேயாகும், தஞ்சையிலுள்ள கள்ளர் மாகசங்சத்தினர் பற்பல இடங்கட்கும் புலவர்களை யனுப்பிப் பிரசங்கங்கள் செய்வித்தும், துண்டுப்பத்திரங்கள் வெளியிட்டும் யாவர்க்கும் கல்வியில் ஆர்வத்தை யுண்டாக்கி, நல்லொழுக்கத்திற்றிருப்புதல் வேண்டும். பள்ளிக் கூடங்களும், உணவுவிடுதி(ஹாஸ்டல்) களும் ஏற்படுத்துதல் வேண்டும். கல்லூரி (ஹைஸ்கூல், காலேஜ்)களில் படிக்கும் எளிய மாணவர்களுக்கும், திறமையுடையோருக்கும் உதவிச்சம்பளமும், பரிசுகளும் கொடுத்து ஊக்குதல் வேண்டும்.
மற்றும் இவ்வகுப்பினர் யாவரும் கல்வியில் விருப்பமுடையவர்களாய்த் தம் பிள்ளைகட்கு எவ்விதத்திலு:ம் கல்வி கற்பித்தல் வேண்டும்.
'தந்தை மகற்காற்று நன்றி யவையத்து
முந்தி யிருப்பச் செயல்'
என்று, கல்வி யொன்றைத்தானே மக்களுக்குத் தேடித்தர வேண்டு மெனத் திருவள்ளுவர் கூறிவைத்தார். கல்வியின் பிற பயன்களை யெல்லாம் அறியாவிட்டாலும், ஒரு மனிதனாவது ஒருகூட்டமாவது கல்வியினாற்றான் உலகத்தில் நாகரிகமாய் வாழுமுடியும் என்பதையும் கல்வியில்லாத மனிதன் அல்லது கூட்டம் ஒருகாலத்தில் மற்றை யோர்க்கு அடிமையாய்ப் போக நேரிடும் என்பதையும் சிந்தித்தாவது தம் மக்களுக்கு அழியாப் பொருளாகிய கல்வியைத் தேடி வைப்பார்களாக . இனிக் கள்ளர் நாடுகளில் ஓர் ஊரிலாவது பள்ளிக்கூடம் இல்லாதிருத்தல் கூடாது ஒருபிள்ளையாவது படிக்காமல் இருத்தல் கூடாது என்று பெற்றோர்களும், பெரியோர்களும்உறுதி செய்து கொள்வார்களாயின் சில ஆண்டுகளில் இவ்வகுப்பு வியக்கத்தக்க விதமாக மேன்மையடைந்து விடும். இவ்வகுப்பினர்க்கு இயல்பிலே கூரிய அறிவும், மெற்கொண்டதைச் சாதிக்கும் உறுதியும் உண்டு இத்தையோர் கல்வியை மேற்கொண்டால் உலகிற்கே பெரிய நன்மை யுண்டு.
இனி இவ்வகுப்பினரில் மதுவுண்டல் என்னும் தீய வழக்கமுடையோர் இருப்பின் அஃது எவ்வளவு இழிவானது என்பதை யுணர்ந்து இனியேனும் அவர்கள்அதைக் கைவிடுவார்களாக. மதுவுண்போரை மிக இழிந்தவரென மதித்து, மற்றையோர் அவர்களோடு எவ்வித சம்பந்தமும் வைத்துக்கொள்ளா திருப்பின் அவர்கள் விரைவில் திருந்துதற்கு இடனண்டு. களவுத் தொழில் செய்வார் யாவரே யாயினம் அவர்களை அரசாங்கத்தினரிடம் பிடித்துத் தருவார்களாயின் இவர்கள் தம் வகுப்பிற்கு எவ்வளவோ நன்மை செய்தவர்களாவர்.
இவர்கள் பெரும்பாலும் நிலக்காரர்களாதலின் உழவுத் தொழிலில் மிக்க கருத்தும் ஊக்கமும் உடையராதல் வேண்டும். 'மேழிச் செல்வம் கோழை படாது' என்பது அமுதவாக்கன்றோ? இந்நாட்டில் இவர்கள் வேறு எவ்வித கைத்தொழிலும் இல்லாதவர் களாகவே யிருக்கின்றனர். ஒரு பெரிய சமூகம் இவ்வாறிருப்பது சிறிதும் சரியன்று. இது நாட்டின் நலத்தையே தடைப்படுத்தக் கூடியதாகும். ஆதலின் இவர்கள் தத்தமக்கியைந்த யாதேனும்ஒரு கைத்தொழிலை மேற்கொள்ள வேண்டும் . இவர்கள் ஒற்றுமையுடன் கூட்டுறுவுச் சங்கங்களும், பண்டசாலைகளும் ஏற்படுத்திக் கொள்வார்களாயின் எவ்வளவோ நலமாக விருக்கும். கல்யாணம் முதலியவற்றில் அளவின்றிச் செய்யப்படும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தல் வேண்டும். அவற்றில் ஒரு சிறு பகுதியைக் கல்விக் கென்று சேர்த்துவைப்பின் மிகுந்த நன்மை பயக்கும். பொதுவில் யாவரும் ஒற்றுமையைப் பலப்படுத்தல் வேண்டும். ஒற்றுமைக் குறைவாலன்றோ இவர்கள் பொருளெல்லாம் அழிந்தொழிந்தன. எவ்வகை வழக்குகளையும் முன்போல் இவர்கள் தாமே தீர்த்துக் கொள்வார்களாயின் அளவுகடந்த நன்மையுண்டாகும். இனி, பல நாடுகளிலுமுள்ள இவ்வகுப்பினர் தம்மிற் கலந்து பழக்க வழக்கங்களை நாகரிகமுறையில் திருத்திக்கொண்டு ஒற்றுமை பெறதல் வேண்டும்.
நாம் இங்கே சொல்லியனவெல்லாம் உலகத்தில் பல வகுப்பினர் இப்பொழுது மேற்கொண்டு செய்வனவே; ஒன்றும் புதிதன்று; செய்தற்கு அருமையானது மன்று. ஒவ்வொரு வகுப்பினர் தங்கள் முன்னேற்றத்திற்கு எவ்வளவு பாடுபட்டு வருகின்றனர்? ஆந்திர நாட்டில் ரெட்டி வகுப்பினரும், மைசூர் நாட்டில் வொக்காலிகர் என்ற வகுப்பினரும் மிக உழைத்துவருகினறனர். தமிழ் நாட்டில் நாடார் என்னும் சான்றார் வகுப்பினரைக் குறிப்பிடலாகும். இவர்கள் செய்துவரும் காரியங்கள் மிக வியக்கற்பாலன வாகும். இனி கள்ளர்கள் ஏனையெல்லா வகுப்பினரோடும் அன்பும், ஒற்றுமையும் உடையவராய்க் கலந்து வாழ்தல் வேண்டும். சில வகுப்பினர் சில பழக்கங்களினாலே தம்முடன் உணவு முதலிய வற்றில் கலந்துகொள்ள முடியாதவராயிருப்பர். அத்தகைய இடங்களில் தாமும் தம் வகுப்பின் பெருமைக்கு குறைவுண்டாகாத வாறு நடந்துகொள்ளல் வேண்டும். பொதுவில் உலகிலுள்ள மக்களெல்லாம் தமக்குச் சமமானவரென்றும் நண்பரென்றும் போற்றி யொழுகுதல் வேண்டும்.
தொடரும் 28
0மறுமொழிகள்:
Post a Comment
<< முகப்பு