கள்ளர் சரித்திரம் - 25 -
சில காலத்தின் முன்பு இவர்களிலே சிலர் சிவஞானிகளாய் விளங்கினரெனத் தெரிகிறது.
இனி, சோணாட்டிலே இன்னோர் அடைந்திருந்து பொது வாழ்க்கை நிலையைக் கவனிப்போம். இவர்களிலே பல சமீன்றார்களும் சில ஆயிர வேலியாளர்களும் இருத்தலை முன்பு குறிப்பிட்டோம். மற்றும் முப்பது நாற்பது குடும்பங்கள் நூறு வேலி, இருநூறு வேலி நிலமுளளனவாக விளங்கின. இக்குலத்தவரில் ஏறக்குறைய எல்லோருமே நிலக்காரர்களாக யிருந்திருக்கின்றனர். இந்திய தேசத்திற்கே நெற்களஞ்சிம் என்று சொல்லப்படும் தஞ்சை ஜில்லாவின் பெரும்பாகம் இவர்கட்கு உரியதாயிருந்தது. இவர்களிற் சிற்சிலர் அரசர்கள் பால் பல்லக்கு முதலிய விருதுகள் பெற்றிருக்கின்றனர். பல குடும்பங்களில் ஆடவர்களும், பெண்டிர்களும் பல்லக்குளிற் செல்லும் வழக்கமுடையரா யிருந்திருக்கின்றனர், இவர்கள் மிக்குள்ள ஊர்களிலெல்லாம் வேறு எவ்வகுப்பினரும் இவர்களில் தலைவரா யுள்ளார்பால் தங்கள் வழக்குகளைச் சொல்லித் தீர்த்துக் கொள்ளுதல் வழக்கமாகவுள்ளது. இவர்கள் தொகை மிகுந்துள்ள ஊர்களில் தலைவர்களாயிருப்போரும் இவர்களே, தாழ்ந்த அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பினரென்போர் இவர்களிடம் ஊழியஞ் செய்தலைத் தமக்கு மேன்மையாகக் கொண்டு பாராட்டுவர். இவர்களும் அவர்கட்குக் குடியிருக்க நிலங்கொடுத்தும், கல்யாணத்திற்குத் தாலி செய்து கொடுத்தும், மற்றும் நன்மை தின்மைகட்கு வேண்டுவன புரிந்தும் அவர்களை அன்புடன் ஆதரிப்பார்கள், கல்யாண முதலிய பழக்க வழக்கங்களில் இவர்கட்கும் வெள்ளாளர் முதலிய பிற வகப்பினர்க்கும் இந்நாட்டில் யாதும் வேற்றுமை காணப்படுவதில்லை.
மதுரைப் பக்கத்திலுள்ள கள்ளவர்கட்கும் தஞ்சைப் பக்கத்திலுள்ளோர்க்கம் பழக்க வழக்கங்களில் இருக்கிற வேற்றுமையைத் தஞ்சை ஜில்லாக் கெசட்டியர் முதலியன அறிவிக்கின்றன. இவர்கட்கும் அவர்கட்கும் இதுவரை எவ்வகையான சம்பந்தமும் இருந்ததாகத் தெரியவில்லை. எனினும் அவர்களை வேறு யாரோ என இவர்கள் ஒதுக்கிவிடப் பார்ப்பது அவ்வளவு சரியன்று; அவர்களும் இன்னோர் துணைவரே. அவர்களிடம் தகாத பழக்க வழக்கங்கள் காணப்படின் இவர்கள் அவர்களோடு கலந்து அவற்றைத் திருத்துதலே கடனாம். இனி இவ்வகுப்பினர் போர் புரிவதில் மிக்க விருப்பமுடையவர். வீரம், அஞ்சாமை, தாராளம், அடைக்கலம் புகுந்தாரைப் பாதுகாத்தல் என்பன இவர்கட்குச் சிறப்பாக உரிய குணங்களாகும். எங்கோ பெரிய இடங்களில் இரண்டொரு தவறு நேர்ந்திருப்பின் அதனை இங்கே எடுத்துக்கொள்ளலாகாது. '1656-ல் இவர்களை மேற்பார்த்து வந்த திருச்சிராப்பள்ளி நாய்க்கர் (வைசிராய்) ஆன குப்பாண்டி யென்பவர் காந்தலூருக்குச் சென்று அங்குள்ள பாதிரியைப் பயமுறுத்திப் பணங்கேட்டபொழுது, அப்பாதிரி கள்ளர்களின் பாதுகாவலில் இருந்ததனால் அவர்களுக்கும் குப்பாண்டி நாய்க்கருக்கும் பெரிய சண்டை யுண்டாயிற்று' என்று ரெவரெண்டு காஸ்டெட்ஸ் கூறியிருக்கின்றார். 1745-ல் முராரி ராவுக்குக்கீழ் மகாராட்டிரர் படையெடுத்தபொழுது ஆவூரிலுள்ள பாதிரிகளும், மற்றைய கிறிஸ்துவர்களும் கூனம்பட்டியில் அடைக்கலம் புகுந்தனர் என்று தெரிகிறது, இங்ஙனம் பலவுள. அடைக்கலம் புக்காரைப் பாதுகாப்பதில் தம்முயிரையும் பொருட்படுத்தாப் பெருந்தன்மை வாய்ந்தவர் இக்கலத்தினரென்பது துணிபு.
இவர்களில் பலர் சைவமத்தையும், சிலர் வைணவ மதத்தையும் தழுவினோராவர் பாண்டிநாட்டுக் கள்ளர்களைப் பற்றி எழுதிய ஒருவர் ' இவர்கள் சைவமதத்தினரேயாயினும், இவர்கள் முக்கியமாய்க் கொண்டாடும் தெய்வம் அழகர்என்றனர். அஃது உண்மையென்பதைக் கள்ளழகர் என்னம் பெயரே வலியுறுத்தும் முருகக்கடவுள் பால் இவர்கள் மிக்க அன்புடையவர்கள். சைவர்களும் வைணவர்களும் ஒருவர் வீட்டில் ஒருவர் கல்யாணஞ் செய்து கொள்வதுண்டு.
தொடரும் 26
0மறுமொழிகள்:
Post a Comment
<< முகப்பு